கோல்கட்டாவில் 200வது டெஸ்ட்

சச்சினின் 200வது டெஸ்ட் போட்டியை, கோல்கட்டாவில் நடத்த வேண்டும் என, கோல்கட்டா கிரிக்கெட் சங்கம் (சி.ஏ.பி.,) வேண்டுகோள் விடுத்தது. 
இந்திய அணியின் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின், 40. சர்வதேச ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் "சதத்தில் சதம்' அடித்து சாதனை படைத்தார். இதுவரை 198 டெஸ்டில் 15,837 ரன்கள் எடுத்துள்ளார். 

சமீப காலமாக பேட்டிங்கில் ஏமாற்றி வரும் சச்சின், சொந்த மண்ணில் 200வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் வகையில், இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) ஏற்பாடு செய்து வருகிறது. 
இதன்படி, நவ., மாதம் இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸ் அணியுடன், 2 டெஸ்ட், 5 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கவுள்ளது. இதில் இரண்டாவது டெஸ்ட் போட்டி, சச்சினின் சொந்த ஊரான மும்பையில் நடக்கும் எனத் தெரிகிறது. 
முதல் டெஸ்ட்டை மும்பையில் நடத்திவிட்டு, 2வது போட்டியை கோல்கட்டாவில் நடத்த வேண்டும் என, சி.ஏ.பி., சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
சி.ஏ.பி., காசாளர் பிஷ்வரப் தே கூறியது:
இந்திய மண்ணில் சச்சின் பங்கேற்கும் கடைசி டெஸ்ட் போட்டியை, மும்பை ஏற்று நடத்த விரும்புகிறது என்பதை புரிந்து கொள்கிறேன். இதை கோல்கட்டாவில் நடத்தினால் நன்றாக இருக்கும். 
இதற்கு ஈடன் கார்டன் மைதானம் தான் சரியான இடம். இந்திய மைதானங்களில் இங்கு தான் அதிகமான இருக்கைகள் (67 ஆயிரம்) உள்ளன மற்றும் வரலாற்று சிறப்பு மிக்க மைதானம் இது. 
இதுகுறித்து பி.சி.சி.ஐ., தலைவர் சீனிவாசனிடம் ஏற்கனவே தெரிவித்து விட்டோம். போர்டு என்ன முடிவெடுக்க உள்ளது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
இவ்வாறு பிஷ்வரப் தே கூறினார்.

டில்லி அணி பயிற்சியாளர் கிறிஸ்டன்

டில்லி அணியின் தலைமை பயிற்சியாளராக தென் ஆப்ரிக்காவின் கிறிஸ்டன் நியமிக்கப்பட்டார். 
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டன், 45. தென் ஆப்ரிக்காவை சேர்ந்த இவரது பயிற்சியில் இந்திய டெஸ்ட் அணி, "நம்பர்-1' இடத்துக்கு முன்னேறியது. 2011ல் சொந்த மண்ணில் இந்திய அணி உலக கோப்பை வென்றது. 

இதன் பின் தென் ஆப்ரிக்க அணிக்கு பயிற்சியாளராக சென்று, அந்த அணியை டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பெற வைத்தார். கடந்த ஆக., மாதத்துடன் பதவி விலகிய இவர், இப்போது டில்லி பிரிமியர் அணிக்கு தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். 
தற்போதுள்ள எரிக் சைமன்ஸ் உதவி பயிற்சியாளராக செயல்படவுள்ளார். கடந்த ஆறாவது தொடரில், 8வது இடம் பெற்ற டில்லி அணி, கிறிஸ்டன் பயிற்சியில் கோப்பை வெல்லும் என நம்பப்படுகிறது. 
கிறிஸ்டன் கூறியது: 
இது சவாலான பணி தான். என்னை ஒப்பந்தம் செய்ய எரிக் சைமன்ஸ் தான் பரிந்துரை செய்தார். என் குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவழிக்க விரும்புகிறேன். எனவே தான், ஆண்டுக்கு மூன்று மாதம் மட்டும் பணி புரியும் பிரிமியர் தொடருக்கு முன்னுரிமை அளித்தேன். இதில் வீரர்களின் திறமையை வெளிக்கொண்டு வர முயற்சிப்பேன்.
பிரிமியர் தொடரில் அடுத்தடுத்து போட்டிகள் இருக்கும். இதற்கேற்ப அணியை தயார் செய்ய வேண்டும். இதற்கு தகுந்து, இந்தியாவில் ஏற்கனவே பணிபுரிந்த அனுபவத்தின் அடிப்படையில், சில வீரர்களை அணியில் இடம்பெற செய்வேன். 
இவ்வாறு கிறிஸ்டன் கூறினார்.
கோஹ்லிக்கு பாராட்டு
விராத் கோஹ்லி குறித்து கிறிஸ்டன் கூறுகையில்,"" இவர் அபூர்வமான திறமை படைத்தவர். பெரிய வீரராக வருவார் என துவக்கத்திலேயே நம்பினேன். சில ஆண்டுகளில் பெரியளவில் வளர்ச்சி பெற்றுள்ளார். இவர், சச்சின் இடத்தை நிரப்புவார் என கூற முடியாது. சச்சின் இடத்துக்கு ஒருவரை பரிந்துரை செய்வது "ரிஸ்க்கான' செயல்,'' என்றார். 
சபாஷ் பிளட்சர்
இந்திய அணி பயிற்சியாளர் பிளட்சர் குறித்து கூறுகையில்,"" இந்திய அணியில் தற்போது இளம் வீரர்கள் அதிகம் உள்ளதால், இவர்களுக்கு பயிற்சி தருவது கடினம். இதையும் மீறி, பிளட்சர் சிறப்பாக செயல்படுகிறார். சமீபத்தில் நடந்த தென் ஆப்ரிக்க "ஏ' அணிக்கு எதிரான தொடரில் இந்திய வீரர்கள் சிலரிடம் பழகும் வாய்ப்பு கிடைத்தது. இதன் மூலம், "சீனியர்' வீரர்களுடன் கடந்த கால நினைவுகளை புதுப்பித்துக் கொண்டேன்,'' என்றார்

சூப்பர் கோப்பை வென்றது பார்சிலோனா

லா லிகா' தொடர் சாம்பியன் பார்சிலோனா, "கோபா டெல் ரே' தொடரில் கோப்பை வென்ற அத்லெட்டிகோ மாட்ரிட் அணிகளுக்கு இடையில் "ஸ்பானிஷ் சூப்பர் கோப்பை' தொடர் (2 போட்டி) நடந்தது. 

இதன் முதல் லீக் போட்டி 1-1 என, "டிரா' ஆனது. இரண்டாவது போட்டி பார்சிலோனாவில் நடந்தது. இரு அணிகளும் கோல் அடிக்க எடுத்த முயற்சிகள் வீணாகின. இதையடுத்து போட்டி 0-0 என, "டிரா' ஆனது. இருப்பினும், இதற்கு முன்பு அடித்த கோல் அடிப்படையில், பார்சிலோனா அணிக்கு சாம்பியன் பட்டம் கிடைத்தது. 
கடந்த ஐந்து ஆண்டுகளில், பார்சிலோனா அணி வெல்லும் 4வது சூப்பர் கோப்பை இது. தவிர, சூப்பர் கோப்பை வரலாற்றில் 2 லீக் போட்டியிலும் வெற்றி பெறாத ஒரு அணி, கோப்பை வெல்வது இது தான் முதன் முறை

சூப்பர் கோப்பை கால்பந்து:பேயர்ன் முனிக் சாம்பியன்

சூப்பர் கோப்பை கால்பந்து போட்டியில், பேயர்ன் முனிக் அணி சாம்பியன் கோப்பை வென்றது. செல்சி அணியை "பெனால்டி ஷூட் அவுட்' முறையில் வீழ்த்தியது.
ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் ஒன்றியம் (யு.இ.எப்.ஏ.,) சார்பில், 38வது சூப்பர் கோப்பை கால்பந்து போட்டி, செக் குடியரசில் உள்ள பிராகா நகரில் நடந்தது. இதில், சாம்பியன்ஸ் லீக் மற்றும் ஐரோப்பிய லீக் தொடர்களின் "நடப்பு சாம்பியன்' அணிகள் மோதும். இதன்படி, செல்சி (சாம்பியன்ஸ் லீக்), பேயர்ன் முனிக் (ஐரோப்பிய லீக்) அணிகள் மோதின.

ஆட்டத்தின் 8வது நிமிடத்தில் செல்சி அணியின் பெர்ணான்டோ டோரஸ் முதல் கோல் அடித்தார். இதற்கு பேயர்ன் முனிக் அணியினரால் பதிலடி கொடுக்க முடியவில்லை. முதல் பாதி முடிவில் செல்சி அணி 1-0 என முன்னிலை வகித்தது.
இரண்டாவது பாதியில் எழுச்சி கண்ட பேயர்ன் முனிக் அணிக்கு 47வது நிமிடத்தில் பிராங்க் ரிபெரி கோல் அடித்தார். இதற்கு, 93வது நிமிடத்தில் செல்சி அணியின் ஈடன் ஹஜார்டு ஒரு கோல் அடித்து பதிலடி கொடுத்தார். தொடர்ந்து போராடிய பேயர்ன் முனிக் அணிக்கு, "ஸ்டாபேஜ்' நிமிடத்தில் (120+1வது) ஜாவி மார்டினஸ் ஒரு கோல் அடித்தார்.
ஆட்டநேர முடிவில், போட்டி 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலை வகித்தது. கூடுதல் நேரத்திலும் இரு அணி வீரர்கள் கோல் எதுவும் அடிக்காததால், போட்டியின் முடிவு "பெனால்டி ஷூட் அவுட்' முறைக்கு சென்றது. இதில் அபாரமாக ஆடிய பேயர்ன் முனிக் அணி 5-4 என்ற கணக்கில் வெற்றி பெற்று, சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.

கோப்பை வென்றது சானியா ஜோடி

நியூஹேவன் ஓபன் டென்னிஸ் தொடரின் இரட்டையர் பிரிவில், இந்தியாவின் சானியா மிர்சா, சீனாவின் ஜி ஜெங் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.
அமெரிக்காவில் நியூஹேவன் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் பெண்கள் இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் சானியா, சீனாவின் ஜி ஜெங் ஜோடி, சுலோவேனியாவின் காத்தரினா, ஸ்பெயினின் அனபெல் ஜோடியை எதிர்கொண்டது.

துவக்கம் முதல் அசத்திய சானியா ஜோடி, முதல் செட்டை 6-3 என எளிதாக வென்றது. தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய சானியா ஜோடி இரண்டாவது செட்டையும் 6-4 என சுலபமாக கைப்பற்றியது. 
முடிவில், இந்தியாவின் சானியா மிர்சா, சீனாவின் ஜி ஜெங் ஜோடி என்ற 6-3, 6-4 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று, கோப்பை வென்றது. 
கிவிட்டோவா தோல்வி: 
ஒற்றையர் பிரிவு பைனலில் செக் குடியரசின் பெட்ரா கிவிட்டோவா, ருமேனியாவின் ஷிமோனா ஹெலிப்பை சந்தித்தார். இதில் துவக்கம் முதல் ஆதிக்கம் செலுத்திய ஷிமோனா 6-2, 6-2 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்

ஹாப்மேன் தொடரில் பர்டோலி

காயம் காரணமாக ஓய்வு பெற்ற பிரான்சின் மரியன் பர்டோலி, ஹாப்மேன் கோப்பை தொடரில் பங்கேற்கிறார்.
பிரான்ஸ் டென்னிஸ் வீராங்கனை மரியன் பர்டோலி, 28. கடந்த 13 ஆண்டுகளாக சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்று வந்த இவர், சமீபத்தில் முடிந்த விம்பிள்டன் தொடரில் தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றார். 

பின், ஆக., 15ல் சர்வதேச டென்னிஸ் அரங்கில் இருந்து ஓய்வுபெறுவதாக திடீரென அறிவித்தார். இப்போது மீண்டும் டென்னிஸ் அரங்கிற்கு திரும்புகிறார். 
வரும் டிச. 28, 2013- ஜன. 4, 2014 ல் ஆஸ்திரேலியாவின் பெர்த்தில், கலப்பு இரட்டையர் அணிகள் பங்கேற்கும் ஹாப்மேன் தொடருக்கான அணியை பிரான்ஸ் தேர்வு செய்தது. இதில் பர்டோலி, டி சோங்கா இணைந்து பங்கேற்கவுள்ளனர்

சாம்பியன்ஸ் 'லீக்' போட்டி ஐதராபாத்தில் நடக்காது: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சாம்பியன்ஸ் ‘லீக்’ 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 17–ந்தேதி முதல் அக்டோபர் 6–ந்தேதி வரை நடைபெறுகிறது.

இதன் தகுதி சுற்று ஆட்டம் 17–ந்தேதி முதல் 20–ந்தேதி வரை நடக்கிறது. தகுதி சுற்றுக்கான 6 ஆட்டங்களும் ஐதராபாத் ராஜீவ்காந்தி ஸ்டேடியத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதற்கிடையே விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெறுவதால் சாம்பியன்ஸ் ‘லீக்’ தகுதி சுற்று போட்டிக்கு தங்களால் பாதுகாப்பு அளிக்க முடியாது என்று ஐதராபாத் போலீசார் அறிவித்து இருந்தனர்.

இதனால் சாம்பியன்ஸ் ‘லீக்’ தகுதி சுற்று ஆட்டம் மட்டும் ஐதராபாத்தில் இருந்து வேறுஇடத்துக்கு மாற்றப்படும் என்றும், முதன்மை சுற்று ஆட்டங்கள் அங்கு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் சாம்பியன் ‘லீக்’ போட்டிக்கான இடத்தில் இருந்து ஐதராபாத் நீக்கப்பட்டுள்ளது.

அங்கு எந்த ஒரு போட்டியும் நடக்காது என்று அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அங்கு நடைபெற இருந்த 12 ஆட்டங்களும் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

17–ந்தேதி முதல் 20–ந்தேதி வரை நடைபெற இருந்த 6 தகுதி சுற்று ஆட்டங்கள் மொகாலிக்கு மாற்றப்பட் டுள்ளது. இதேபோல அங்கு 24–ந்தேதி நடைபெற இருந்த முதன்மை சுற்றின் 2 ஆட்டமும் மொகாலிக்கு மாற்றப்பட்டுள்ளது.

28–ந்தேதி நடைபெற இருந்த ஆட்டம் (2) ராஞ்சிக்கும், 30–ந்தேதி நடைபெற இருந்த ஆட்டம் (2) அகமதாபாத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

தகுதி சுற்று ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் (ஐ.பி.எல்.லில் 4–வது இடம்), சைபலாபாத் வால்வோஸ் (பாகிஸ்தான்), ஒடாகோஹேட்ஸ் (நியூசி லாந்து) கனுராதா மரூண்ஸ் (இலங்கை) ஆகிய 4 அணிகள் விளையாடுகின்றன. இதில் 2 அணிகள் முதன்மை சுற்றுக்கு தகுதி பெறும்.

ஐ.பி.எல். சாம்பியனான மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பிரிஸ்பேன் ஹீட், பெர்த் ஸ்கோர்சர்ஸ் (ஆஸ்தி ரேலியா), லயன்ஸ், டைட்டன்ஸ் (தென் ஆப்பிரிக்கா), டிரினி டாட் டொபாக்கோ (வெஸ்ட் இண்டீஸ்) ஆகியவை நேரடியாக முதன்மை சுற்றில் ஆடுகின்றன.