கோல்கட்டாவில் 200வது டெஸ்ட்

சச்சினின் 200வது டெஸ்ட் போட்டியை, கோல்கட்டாவில் நடத்த வேண்டும் என, கோல்கட்டா கிரிக்கெட் சங்கம் (சி.ஏ.பி.,) வேண்டுகோள் விடுத்தது. 
இந்திய அணியின் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின், 40. சர்வதேச ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் "சதத்தில் சதம்' அடித்து சாதனை படைத்தார். இதுவரை 198 டெஸ்டில் 15,837 ரன்கள் எடுத்துள்ளார். 

சமீப காலமாக பேட்டிங்கில் ஏமாற்றி வரும் சச்சின், சொந்த மண்ணில் 200வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் வகையில், இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) ஏற்பாடு செய்து வருகிறது. 
இதன்படி, நவ., மாதம் இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸ் அணியுடன், 2 டெஸ்ட், 5 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கவுள்ளது. இதில் இரண்டாவது டெஸ்ட் போட்டி, சச்சினின் சொந்த ஊரான மும்பையில் நடக்கும் எனத் தெரிகிறது. 
முதல் டெஸ்ட்டை மும்பையில் நடத்திவிட்டு, 2வது போட்டியை கோல்கட்டாவில் நடத்த வேண்டும் என, சி.ஏ.பி., சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
சி.ஏ.பி., காசாளர் பிஷ்வரப் தே கூறியது:
இந்திய மண்ணில் சச்சின் பங்கேற்கும் கடைசி டெஸ்ட் போட்டியை, மும்பை ஏற்று நடத்த விரும்புகிறது என்பதை புரிந்து கொள்கிறேன். இதை கோல்கட்டாவில் நடத்தினால் நன்றாக இருக்கும். 
இதற்கு ஈடன் கார்டன் மைதானம் தான் சரியான இடம். இந்திய மைதானங்களில் இங்கு தான் அதிகமான இருக்கைகள் (67 ஆயிரம்) உள்ளன மற்றும் வரலாற்று சிறப்பு மிக்க மைதானம் இது. 
இதுகுறித்து பி.சி.சி.ஐ., தலைவர் சீனிவாசனிடம் ஏற்கனவே தெரிவித்து விட்டோம். போர்டு என்ன முடிவெடுக்க உள்ளது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
இவ்வாறு பிஷ்வரப் தே கூறினார்.

டில்லி அணி பயிற்சியாளர் கிறிஸ்டன்

டில்லி அணியின் தலைமை பயிற்சியாளராக தென் ஆப்ரிக்காவின் கிறிஸ்டன் நியமிக்கப்பட்டார். 
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டன், 45. தென் ஆப்ரிக்காவை சேர்ந்த இவரது பயிற்சியில் இந்திய டெஸ்ட் அணி, "நம்பர்-1' இடத்துக்கு முன்னேறியது. 2011ல் சொந்த மண்ணில் இந்திய அணி உலக கோப்பை வென்றது. 

இதன் பின் தென் ஆப்ரிக்க அணிக்கு பயிற்சியாளராக சென்று, அந்த அணியை டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பெற வைத்தார். கடந்த ஆக., மாதத்துடன் பதவி விலகிய இவர், இப்போது டில்லி பிரிமியர் அணிக்கு தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். 
தற்போதுள்ள எரிக் சைமன்ஸ் உதவி பயிற்சியாளராக செயல்படவுள்ளார். கடந்த ஆறாவது தொடரில், 8வது இடம் பெற்ற டில்லி அணி, கிறிஸ்டன் பயிற்சியில் கோப்பை வெல்லும் என நம்பப்படுகிறது. 
கிறிஸ்டன் கூறியது: 
இது சவாலான பணி தான். என்னை ஒப்பந்தம் செய்ய எரிக் சைமன்ஸ் தான் பரிந்துரை செய்தார். என் குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவழிக்க விரும்புகிறேன். எனவே தான், ஆண்டுக்கு மூன்று மாதம் மட்டும் பணி புரியும் பிரிமியர் தொடருக்கு முன்னுரிமை அளித்தேன். இதில் வீரர்களின் திறமையை வெளிக்கொண்டு வர முயற்சிப்பேன்.
பிரிமியர் தொடரில் அடுத்தடுத்து போட்டிகள் இருக்கும். இதற்கேற்ப அணியை தயார் செய்ய வேண்டும். இதற்கு தகுந்து, இந்தியாவில் ஏற்கனவே பணிபுரிந்த அனுபவத்தின் அடிப்படையில், சில வீரர்களை அணியில் இடம்பெற செய்வேன். 
இவ்வாறு கிறிஸ்டன் கூறினார்.
கோஹ்லிக்கு பாராட்டு
விராத் கோஹ்லி குறித்து கிறிஸ்டன் கூறுகையில்,"" இவர் அபூர்வமான திறமை படைத்தவர். பெரிய வீரராக வருவார் என துவக்கத்திலேயே நம்பினேன். சில ஆண்டுகளில் பெரியளவில் வளர்ச்சி பெற்றுள்ளார். இவர், சச்சின் இடத்தை நிரப்புவார் என கூற முடியாது. சச்சின் இடத்துக்கு ஒருவரை பரிந்துரை செய்வது "ரிஸ்க்கான' செயல்,'' என்றார். 
சபாஷ் பிளட்சர்
இந்திய அணி பயிற்சியாளர் பிளட்சர் குறித்து கூறுகையில்,"" இந்திய அணியில் தற்போது இளம் வீரர்கள் அதிகம் உள்ளதால், இவர்களுக்கு பயிற்சி தருவது கடினம். இதையும் மீறி, பிளட்சர் சிறப்பாக செயல்படுகிறார். சமீபத்தில் நடந்த தென் ஆப்ரிக்க "ஏ' அணிக்கு எதிரான தொடரில் இந்திய வீரர்கள் சிலரிடம் பழகும் வாய்ப்பு கிடைத்தது. இதன் மூலம், "சீனியர்' வீரர்களுடன் கடந்த கால நினைவுகளை புதுப்பித்துக் கொண்டேன்,'' என்றார்

சூப்பர் கோப்பை வென்றது பார்சிலோனா

லா லிகா' தொடர் சாம்பியன் பார்சிலோனா, "கோபா டெல் ரே' தொடரில் கோப்பை வென்ற அத்லெட்டிகோ மாட்ரிட் அணிகளுக்கு இடையில் "ஸ்பானிஷ் சூப்பர் கோப்பை' தொடர் (2 போட்டி) நடந்தது. 

இதன் முதல் லீக் போட்டி 1-1 என, "டிரா' ஆனது. இரண்டாவது போட்டி பார்சிலோனாவில் நடந்தது. இரு அணிகளும் கோல் அடிக்க எடுத்த முயற்சிகள் வீணாகின. இதையடுத்து போட்டி 0-0 என, "டிரா' ஆனது. இருப்பினும், இதற்கு முன்பு அடித்த கோல் அடிப்படையில், பார்சிலோனா அணிக்கு சாம்பியன் பட்டம் கிடைத்தது. 
கடந்த ஐந்து ஆண்டுகளில், பார்சிலோனா அணி வெல்லும் 4வது சூப்பர் கோப்பை இது. தவிர, சூப்பர் கோப்பை வரலாற்றில் 2 லீக் போட்டியிலும் வெற்றி பெறாத ஒரு அணி, கோப்பை வெல்வது இது தான் முதன் முறை

சூப்பர் கோப்பை கால்பந்து:பேயர்ன் முனிக் சாம்பியன்

சூப்பர் கோப்பை கால்பந்து போட்டியில், பேயர்ன் முனிக் அணி சாம்பியன் கோப்பை வென்றது. செல்சி அணியை "பெனால்டி ஷூட் அவுட்' முறையில் வீழ்த்தியது.
ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் ஒன்றியம் (யு.இ.எப்.ஏ.,) சார்பில், 38வது சூப்பர் கோப்பை கால்பந்து போட்டி, செக் குடியரசில் உள்ள பிராகா நகரில் நடந்தது. இதில், சாம்பியன்ஸ் லீக் மற்றும் ஐரோப்பிய லீக் தொடர்களின் "நடப்பு சாம்பியன்' அணிகள் மோதும். இதன்படி, செல்சி (சாம்பியன்ஸ் லீக்), பேயர்ன் முனிக் (ஐரோப்பிய லீக்) அணிகள் மோதின.

ஆட்டத்தின் 8வது நிமிடத்தில் செல்சி அணியின் பெர்ணான்டோ டோரஸ் முதல் கோல் அடித்தார். இதற்கு பேயர்ன் முனிக் அணியினரால் பதிலடி கொடுக்க முடியவில்லை. முதல் பாதி முடிவில் செல்சி அணி 1-0 என முன்னிலை வகித்தது.
இரண்டாவது பாதியில் எழுச்சி கண்ட பேயர்ன் முனிக் அணிக்கு 47வது நிமிடத்தில் பிராங்க் ரிபெரி கோல் அடித்தார். இதற்கு, 93வது நிமிடத்தில் செல்சி அணியின் ஈடன் ஹஜார்டு ஒரு கோல் அடித்து பதிலடி கொடுத்தார். தொடர்ந்து போராடிய பேயர்ன் முனிக் அணிக்கு, "ஸ்டாபேஜ்' நிமிடத்தில் (120+1வது) ஜாவி மார்டினஸ் ஒரு கோல் அடித்தார்.
ஆட்டநேர முடிவில், போட்டி 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலை வகித்தது. கூடுதல் நேரத்திலும் இரு அணி வீரர்கள் கோல் எதுவும் அடிக்காததால், போட்டியின் முடிவு "பெனால்டி ஷூட் அவுட்' முறைக்கு சென்றது. இதில் அபாரமாக ஆடிய பேயர்ன் முனிக் அணி 5-4 என்ற கணக்கில் வெற்றி பெற்று, சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.

கோப்பை வென்றது சானியா ஜோடி

நியூஹேவன் ஓபன் டென்னிஸ் தொடரின் இரட்டையர் பிரிவில், இந்தியாவின் சானியா மிர்சா, சீனாவின் ஜி ஜெங் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.
அமெரிக்காவில் நியூஹேவன் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் பெண்கள் இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் சானியா, சீனாவின் ஜி ஜெங் ஜோடி, சுலோவேனியாவின் காத்தரினா, ஸ்பெயினின் அனபெல் ஜோடியை எதிர்கொண்டது.

துவக்கம் முதல் அசத்திய சானியா ஜோடி, முதல் செட்டை 6-3 என எளிதாக வென்றது. தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய சானியா ஜோடி இரண்டாவது செட்டையும் 6-4 என சுலபமாக கைப்பற்றியது. 
முடிவில், இந்தியாவின் சானியா மிர்சா, சீனாவின் ஜி ஜெங் ஜோடி என்ற 6-3, 6-4 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று, கோப்பை வென்றது. 
கிவிட்டோவா தோல்வி: 
ஒற்றையர் பிரிவு பைனலில் செக் குடியரசின் பெட்ரா கிவிட்டோவா, ருமேனியாவின் ஷிமோனா ஹெலிப்பை சந்தித்தார். இதில் துவக்கம் முதல் ஆதிக்கம் செலுத்திய ஷிமோனா 6-2, 6-2 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்

ஹாப்மேன் தொடரில் பர்டோலி

காயம் காரணமாக ஓய்வு பெற்ற பிரான்சின் மரியன் பர்டோலி, ஹாப்மேன் கோப்பை தொடரில் பங்கேற்கிறார்.
பிரான்ஸ் டென்னிஸ் வீராங்கனை மரியன் பர்டோலி, 28. கடந்த 13 ஆண்டுகளாக சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்று வந்த இவர், சமீபத்தில் முடிந்த விம்பிள்டன் தொடரில் தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றார். 

பின், ஆக., 15ல் சர்வதேச டென்னிஸ் அரங்கில் இருந்து ஓய்வுபெறுவதாக திடீரென அறிவித்தார். இப்போது மீண்டும் டென்னிஸ் அரங்கிற்கு திரும்புகிறார். 
வரும் டிச. 28, 2013- ஜன. 4, 2014 ல் ஆஸ்திரேலியாவின் பெர்த்தில், கலப்பு இரட்டையர் அணிகள் பங்கேற்கும் ஹாப்மேன் தொடருக்கான அணியை பிரான்ஸ் தேர்வு செய்தது. இதில் பர்டோலி, டி சோங்கா இணைந்து பங்கேற்கவுள்ளனர்

சாம்பியன்ஸ் 'லீக்' போட்டி ஐதராபாத்தில் நடக்காது: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சாம்பியன்ஸ் ‘லீக்’ 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 17–ந்தேதி முதல் அக்டோபர் 6–ந்தேதி வரை நடைபெறுகிறது.

இதன் தகுதி சுற்று ஆட்டம் 17–ந்தேதி முதல் 20–ந்தேதி வரை நடக்கிறது. தகுதி சுற்றுக்கான 6 ஆட்டங்களும் ஐதராபாத் ராஜீவ்காந்தி ஸ்டேடியத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதற்கிடையே விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெறுவதால் சாம்பியன்ஸ் ‘லீக்’ தகுதி சுற்று போட்டிக்கு தங்களால் பாதுகாப்பு அளிக்க முடியாது என்று ஐதராபாத் போலீசார் அறிவித்து இருந்தனர்.

இதனால் சாம்பியன்ஸ் ‘லீக்’ தகுதி சுற்று ஆட்டம் மட்டும் ஐதராபாத்தில் இருந்து வேறுஇடத்துக்கு மாற்றப்படும் என்றும், முதன்மை சுற்று ஆட்டங்கள் அங்கு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் சாம்பியன் ‘லீக்’ போட்டிக்கான இடத்தில் இருந்து ஐதராபாத் நீக்கப்பட்டுள்ளது.

அங்கு எந்த ஒரு போட்டியும் நடக்காது என்று அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அங்கு நடைபெற இருந்த 12 ஆட்டங்களும் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

17–ந்தேதி முதல் 20–ந்தேதி வரை நடைபெற இருந்த 6 தகுதி சுற்று ஆட்டங்கள் மொகாலிக்கு மாற்றப்பட் டுள்ளது. இதேபோல அங்கு 24–ந்தேதி நடைபெற இருந்த முதன்மை சுற்றின் 2 ஆட்டமும் மொகாலிக்கு மாற்றப்பட்டுள்ளது.

28–ந்தேதி நடைபெற இருந்த ஆட்டம் (2) ராஞ்சிக்கும், 30–ந்தேதி நடைபெற இருந்த ஆட்டம் (2) அகமதாபாத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

தகுதி சுற்று ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் (ஐ.பி.எல்.லில் 4–வது இடம்), சைபலாபாத் வால்வோஸ் (பாகிஸ்தான்), ஒடாகோஹேட்ஸ் (நியூசி லாந்து) கனுராதா மரூண்ஸ் (இலங்கை) ஆகிய 4 அணிகள் விளையாடுகின்றன. இதில் 2 அணிகள் முதன்மை சுற்றுக்கு தகுதி பெறும்.

ஐ.பி.எல். சாம்பியனான மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பிரிஸ்பேன் ஹீட், பெர்த் ஸ்கோர்சர்ஸ் (ஆஸ்தி ரேலியா), லயன்ஸ், டைட்டன்ஸ் (தென் ஆப்பிரிக்கா), டிரினி டாட் டொபாக்கோ (வெஸ்ட் இண்டீஸ்) ஆகியவை நேரடியாக முதன்மை சுற்றில் ஆடுகின்றன.

இந்திய கிரிக்கெட் அணியின் இங்கிலாந்து தொடருக்கான போட்டி அட்டவணை அறிவிப்பு

இங்கிலாந்து கிரிக்கெட் அணி அடுத்த ஆண்டு (2014) ஜூன் 26-ந் தேதி முதல் செப்டம்பர் 7-ந் தேதி வரை இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் ஒரு 20 ஓவர் போட்டியில் விளையாட இருக்கிறது. இந்த போட்டி அட்டவணையை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் நேற்று வெளியிட்டது.

டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக இரண்டு 3 நாள் பயிற்சி ஆட்டமும், ஒருநாள் போட்டிக்கு முன்பு ஒரு பயிற்சி ஆட்டமும் நடைபெறுகிறது. முதல் டெஸ்ட் போட்டி டிரென்ட்பிரிட்ஜில் ஜூலை 9-ந் தேதியும், 2-வது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ்சில் ஜூலை 17-ந் தேதியும், 3-வது டெஸ்ட் போட்டி சவுதம்டனில் ஜூலை 27-ந் தேதியும், 4-வது டெஸ்ட் போட்டி ஓல்ட் டிராப்போர்ட்டில் ஆகஸ்டு 7-ந் தேதியும், 5-வது டெஸ்ட் போட்டி ஓவலில் ஆகஸ்டு 15-ந் தேதியும் தொடங்குகிறது. 

முதலாவது ஒருநாள் போட்டி பிரிஸ்டலில் ஆகஸ்டு 25-ந் தேதியும், 2-வது போட்டி சோபியா கார்டனில் ஆகஸ்டு 27-ந் தேதியும், 3-வது போட்டி டிரென்ட் பிரிட்ஜில் ஆகஸ்டு 30-ந் தேதியும், 4-வது போட்டி எட்ஜ்பஸ்டனில் செப்டம்பர் 2-ந் தேதியும், 5-வது போட்டி ஹெட்டிங்லேவில் செப்டம்பர் 5-ந் தேதியும் நடைபெறுகிறது. 20 ஓவர் போட்டி எட்ஜ்பஸ்டனில் செப்டம்பர் 7-ந் தேதி நடக்கிறது. 

1959-ம் ஆண்டுக்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் விளையாட இருப்பது இதுவே முதல் முறையாகும். இந்திய அணி கடைசியாக 2011-ம் ஆண்டில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. இதில் இந்திய அணி 0-4 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரிலும், 0-3 என்ற கணக்கில் ஒருநாள் தொடரிலும் தோல்வி கண்டது. 20 ஓவர் போட்டி 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. 

இந்திய அணியின் நியூசிலாந்து தொடர் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதத்தில் நடைபெறுகிறது. முதலாவது ஒருநாள் போட்டி ஜனவரி 19-ந் தேதியும், 2-வது போட்டி 22-ந் தேதியும், 3-வது போட்டி 25-ந் தேதியும், 4-வது போட்டி 28-ந் தேதியும், 5-வது போட்டி 31-ந் தேதியும் நடக்கிறது. 

முதலாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 6-ந் தேதியும், 2-வது டெஸ்ட் போட்டி 14-ந் தேதியும் தொடங்குகிறது

177 கி.மீ. புளோரிடா கடலை நீந்தி 64 வயதான அமெரிக்க வீராங்கனை சாதனை

அமெரிக்காவின் வலிமையான நீச்சல் வீராங்கனை டயான நையத் (64). இவர் கியூபா தலைநகர் ஹவானாவில் இருந்து அமெரிக்காவின் புளோரிடா வரை 177 கி.மீ. தூரத்தை கடலில் நீத்திக்கடக்கும் முயற்சியை சனிக்கிழமை காலை தொடங்கினார்.  

177 கிலோமீட்டர் நீளமுடைய இந்த புளோரிடா நீரிணைப்பை முதலாவது நபராக நீந்திக்கடக்கும் முயற்சியை சுறாக்கவசம் இன்றி அவர் மேற்கொண்டார். சுமார் 53 மணி நேர தொடர் நீச்சலுக்கு பிறகு புளோரிடாவின் கீ வெஸ்ட் நகர கடற்கரையை நேற்று வெற்றிகரமாக சென்றடைந்தார். 

1978-ம் ஆண்டுமுதல் 4 முறை தோல்வியை தழுவிய 64 வயதான டயானா நையத் கடைசியாக 5-வது முறையாக கடந்து வெற்றிபெற்றுள்ளார். கரையேறிய இவரை நூற்றுக்கணக்கானோர் ஆராவாரத்துடன் வரவேற்றனர். 

அப்போது, ஒரு போதும் முயற்சியை கைவிடாதீர்கள், வயதை கருத்தில் கொள்ளாதீர்கள், விளையாட்டு சிந்தனையை இது வளர்க்கும் என்று சாதனையாளர் டயானா கூறினார். 

கடலில் நீத்துகிறபோது சுறா மற்றும் ஜெல்லி மீன்களின் தாக்குதலில் இருந்து பாதுகாக்க முகத்தில் சிலிகான் முகமூடியை அணிந்துகொண்டார். இந்த சாதனையை முடிக்க அவருடன் 35 உதவியாளர்களும் சென்றனர்.

நரைன் கார்த்திகேயன் சாம்பியன்

இங்கிலாந்தில் நடந்த "ஆட்டோ கிராண்ட்பிரிக்ஸ்' கார்பந்தயத்தில், இந்திய வீரர் நரைன் கார்த்திகேயன் சாம்பியன் பட்டம் வென்றார்.
இங்கிலாந்தில் உள்ள டோனிங்டன் நகரில், நடப்பு ஆண்டின் 7வது சுற்றுக்கான "ஆட்டோ கிராண்ட்பிரிக்ஸ்' கார்பந்தயம் நடந்தது. மொத்தம் இரண்டு சுற்றுகள் கொண்ட இப்பந்தயத்தின் முதல் சுற்றில், "சூப்பர் நோவா இன்டர்நேஷனல்' அணிக்காக பங்கேற்ற இந்திய வீரர் நரைன் கார்த்திகேயன், இரண்டாவது இடம் பிடித்தார். இதன் இரண்டாவது சுற்றில், பந்தய தூரத்தை 28 நிமிடம், 00.985 வினாடியில் கடந்த இந்தியாவின் நரைன் கார்த்திகேயன் முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இது, இந்த ஆண்டு இவர் வென்ற நான்காவது சாம்பியன் பட்டம். முன்னதாக இவர், ஜெர்மனியின் நுர்பர்கிரிங், இத்தாலியின் முஜல்லோ, இங்கிலாந்தில் சில்வர்ஸ்டோன் நகரில் நடந்த பந்தயத்தில் முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டம் வென்றார். இதன்மூலம் சிறந்த டிரைவருக்கான ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டியலில் 170 புள்ளிகளுடன் 4வது இடத்தில் நீடிக்கிறார்.

பெண்கள் இரட்டையர் பிரிவு அறிமுகம்: பாட்மின்டன் சங்க தலைவர் நம்பிக்கை

அடுத்த ஆண்டு நடக்கவுள்ள இரண்டாவது இந்தியன் பாட்மின்டன் லீக் (ஐ.பி.எல்.,) தொடரில், பெண்கள் இரட்டையர் பிரிவு போட்டி மற்றும் அம்பயர் தீர்ப்புக்கு மறுபரிசீலனை செய்யும் முறை அமல்படுத்தப்படும் என தெரிகிறது.
இந்தியாவில், முதலாவது இந்தியன் பாட்மின்டன் லீக் (ஐ.பி.எல்.,) தொடர் வெற்றிகரமாக நடந்தது. இதன் பைனலில், ஐதராபாத் ஹாட்ஷாட்ஸ் அணி 3-1 என அவாத் வாரியர்ஸ் அணியை வீழ்த்தி கோப்பை வென்றது. இம்முறை, இரண்டு ஆண்கள் ஒற்றையர், தலா ஒரு பெண்கள் ஒற்றையர், ஆண்கள் இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவு போட்டிகள் நடத்தப்பட்டன. பெண்கள் இரட்டையர் பிரிவு இடம் பெறவில்லை. இத்தொடருக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட ஜுவாலா கட்டா, அஷ்வினி பொன்னப்பா உள்ளிட்ட நிறைய வீராங்கனைகள், இரட்டையர் பிரிவில் சிறப்பாக விளையாடக் கூடியவர்களாக இருந்தனர். 
இதனால் அடுத்து வரும் தொடர்களில் பெண்கள் இரட்டையர் பிரிவு போட்டிகளை நடத்த வேண்டும் என விருப்பம் தெரிவித்தனர். இதையடுத்து அடுத்த ஆண்டு முதல், பெண்கள் இரட்டையர் பிரிவு போட்டிகள் இடம் பெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்திய பாட்மின்டன் சங்க (பி.ஏ.ஐ.,) தலைவர் அகிலேஷ் தாஸ் குப்தா கூறுகையில், ""ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் சம அளவில் போட்டிகள் நடத்தப்பட வேண்டும். ஒலிம்பிக், உலக சாம்பியன்ஷிப் உள்ளிட்ட பெரிய தொடர்களில் பெண்கள் இரட்டையர் பிரிவு போட்டிகள் நடத்தப்படுகின்றன. எனவே, இந்தியன் பாட்மின்டன் லீக் தொடரை மேலும் பிரபலப்படுத்த, அடுத்த ஆண்டு முதல் பெண்கள் இரட்டையர் பிரிவு போட்டி நடத்த முயற்சி செய்யப்படும். இதேபோல, போட்டியின் போது அம்பயர் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யும் முறை அமல்படுத்த ஆலோசிக்கப்படும். அதிகளவு ரசிகர்களை கொண்டு வருவதற்காக, போட்டி நேரத்தில் மாற்றம் செய்யப்படும்,'' என்றார்.

இந்திய ஹாக்கி அணிக்கு பாராட்டு

ஆசிய கோப்பை ஹாக்கி தொடரில், பைனல் வரை முன்னேறிய இந்திய ஹாக்கி அணிக்கு, இந்திய ஹாக்கி கூட்டமைப்பின் தலைவர் கே.டி. சிங் பாராட்டு தெரிவித்தார்.
மலேசியாவில் உள்ள இபோ நகரில், ஆண்களுக்கான 9வது ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் நடந்தது. இதன் பைனலில், கடைசி நிமிடம் வரை போராடிய இந்திய அணி 3-4 என்ற கோல் கணக்கில் தென் கொரியாவிடம் தோல்வி அடைந்து, வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றிது. லீக் மற்றும் அரையிறுதியில் 100 சதவீத வெற்றியுடன் பைனலுக்கு முன்னேறிய இந்திய அணி, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதும் தோல்வியை சந்தித்தது. இதனால், அடுத்த ஆண்டு நெதர்லாந்தில் நடக்கவுள்ள உலக கோப்பை ஹாக்கி தொடரில் நேரடியாக பங்கேற்கும் வாய்ப்பை இழந்தது. தற்போது இந்திய அணி, வரும் நவம்பர் மாதம் நடக்கவுள்ள ஓசியானா கோப்பை தொடரை எதிர்நோக்கி உள்ளது. இதில், ஏற்கனவே உலக கோப்பை தொடருக்கு தகுதி பெற்ற நியூசிலாந்து அல்லது ஆஸ்திரேலிய அணிகள் கோப்பை வெல்லும் பட்சத்தில், இந்திய அணியின் இடம் உறுதியாகிவிடும்.
இந்திய ஹாக்கி கூட்டமைப்பு (ஐ.எச்.எப்.,) தலைவர் கே.டி. சிங் கூறுகையில், ""ஆசிய கோப்பை தொடரில் இந்திய வீரர்களின் செயல்பாடு மகிழ்ச்சி அளித்தது. பைனலில் கண்ட தோல்வி குறித்து கவலைப்பட தேவையில்லை. ஒட்டுமொத்தமாக பார்க்கையில், இத்தொடரில் இந்திய வீரர்கள் எதிர்பார்த்ததைவிட அருமையாக விளையாடினர். மீண்டும் இந்தியாவில் ஹாக்கி விளையாட்டு புத்துயிர் பெறும்,'' என்றார்

காலிறுதியில் நடால் * பெடரர் அவுட்

யு.எஸ்., ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு ஸ்பெயினின் ரபெல் நடால், டேவிட் பெரரர் ஆகியோர் முன்னேறினார். நான்காவது சுற்றில் தோல்வியடைந்த சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் வெளியேறினார். 
அமெரிக்காவின் நியூயார்க் நகரில், கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற யு.எஸ்., ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு நான்காவது சுற்றில், சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், ஸ்பெயினின் டாமி ராபர்டோவை சந்தித்தார். இதில் துவக்கம் முதல் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்திய பெடரர் "டைபிரேக்கர்' வரை சென்ற முதல் செட்டை 6-7 என இழந்தார். தொடர்ந்து தடுமாறிய பெடரர் அடுத்த இரண்டு செட்களையும் 3-6, 4-6 என கோட்டைவிட்டார். 
முடிவில் சுவிட்சர்லாந்தின் பெடரர், 6-7, 3-6, 4-6 என்ற நேர்செட்களில் தோல்வியடைந்து வெளியேறினார். 
 மற்றொரு போட்டியில், ஸ்பெயினின் ரபெல் நடால், ஜெர்மனியின் பிலிப்பை 6-7, 6-4, 6-3, 6-1 என்ற செட்களில் வீழ்த்தி, காலிறுதிக்கு தகுதி பெற்றார். மற்றொரு போட்டியில் ஸ்பெயினின் டேவிட் பெரரர், செர்பியாவின் ஜான்கோ டிப்சர்விச்சை 7-6, 3-6, 7-5, 7-6 என்ற செட்களில் வென்று காலிறுதிக்குள் நுழைந்தார்

மான்செஸ்டர் யுனைடெட் தோல்வி

 லிவர்பூல் அணிக்கு எதிரான பிரிமியர் லீக் கால்பந்து தொடரின் லீக் போட்டியில், மான்செஸ்டர் யுனைடெட் அணி தோல்வியடைந்தது. 
இங்கிலாந்தில் பிரிமியர் லீக் கால்பந்து தொடர் நடக்கிறது. இதன் லீக் போட்டியில் "நடப்பு சாம்பியன்' மான்செஸ்டர் யுனைடெட், லிவர்பூல் அணிகள் மோதின. ஆட்டத்தின் 4வது நிமிடத்தில் லிவர்பூல் அணியின் டேனியல் முதல் கோல் அடித்தார். இதற்கு மான்செஸ்டர் யுனைடெட் அணி வீரர்களால் பதிலடி கொடுக்க முடியவில்லை. முதல் பாதி முடிவில் லிவர்பூல் அணி 1-0 என முன்னிலை வகித்தது.
இரண்டாவது பாதியில், கடைசி நிமிடம் வரை போராடிய இரு அணி வீரர்களால் கூடுதலாக ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. ஆட்டநேர முடிவில், மான்செஸ்டர் யுனைடெட் அணி 0-1 என தோல்வியடைந்தது.
மற்றொரு போட்டியில் ஆர்சனல் அணி, டாட்டன்ஹாம் அணியை 1-0 என வீழ்த்தியது. வெஸ்ட் பிரவுன்விச் அணி 0-2 என சுவான்சியா சிட்டி அணியிடம் தோல்வியடைந்தது

போட்டிக்கு போட்டி ஆய்வு...அப்புறம் தான் ஓய்வு: மனக்குழப்பத்தில் சச்சின்

இந்தியாவின்ல் 200வது டெஸ்டில் சச்சின் பங்கேற்றாலும், தொடர்ந்து போட்டிகளில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 
இந்திய அணியின் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின், 40. சர்வதேச போட்டிகளில் "சதத்தில் சதம்' அடித்த இவர், 198 டெஸ்டில் 15,837 ரன்கள் எடுத்துள்ளார். சமீப காலமாக பேட்டிங்கில் சொதப்பி வரும் இவர், கடைசியாக 2011, ஜன., 4ல் தென் ஆப்ரிக்கா தொடரில் சதம் அடித்தார். இதன் பின் களமிறங்கிய 38 இன்னிங்சில் (21 டெஸ்ட்) ஒரு சதம் கூட அடிக்கவில்லை. 
சொந்த மண்ணில் தொடர்ந்து 14 டெஸ்டில் இதுவரை சதம் அடிக்கவில்லை. இதனிடையே, இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸ் அணியுடன், சொந்த மண்ணில் 2 டெஸ்ட், 5 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கவுள்ளது. 
பி.சி.சி.ஐ., விதிப்படி இந்த போட்டிகள் பெங்களூரு, ஆமதாபாத்தில் நடக்க வேண்டும். இதை கோல்கட்டா மற்றும் மும்பையில் நடத்த ஏற்பாடு செய்யப்படுகிறது. இதன் படி, சொந்த ஊரான மும்பையில், 200வது டெஸ்டில் பங்கேற்று, சச்சின் ஓய்வு பெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து பி.சி.சி.ஐ., மற்றும் மும்பை கிரிக்கெட் சங்க நிர்வாகிகள், சச்சினுடன் பேசியுள்ளனர். ஆனால், இவர் எதிர்வரும் தென் ஆப்ரிக்க தொடர், அடுத்து 2014ல் நியூசிலாந்து தொடரிலும் பங்கேற்க இருப்பதாக தெரிகிறது. 
2014, நவம்பரில் இந்தியா வரவுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணியை, முன்னதாக இந்த ஆண்டு அழைத்துள்ளனர். இதற்குப்பதில் அடுத்த ஆண்டு இங்கிலாந்து அணியை இந்தியாவுக்கு அழைக்க பி.சி.சி.ஐ., முடிவு செய்துள்ளது. 
இவை நடக்கும் பட்சத்தில், மும்பை மண்ணில் 200 வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்றாலும், சச்சின் ஓய்வு பெறமாட்டார். ஏனெனில், சில மாதங்களாக சச்சின் தனது நண்பர்களிடம்,"தென் ஆப்ரிக்க தொடர் கடினமானது,' என்று தெரிவித்து வருகிறார். 
ஓய்வு கிடையாது: சச்சினின் குழந்தை பருவ நண்பர் ஒருவர் கூறுகையில்,"" கடந்த முறை தென் ஆப்ரிக்காவில் சச்சின் 2 சதம் அடித்தார். இப்போது மீண்டும் தயாராகி வருகிறார். இந்நிலையில் இது போன்ற செய்திகள் எங்கிருந்து தான் வருகின்றனவோ. சச்சினை பொறுத்தவரையில் 200வது டெஸ்டை, சொந்த மண்ணில் விளையாடவுள்ளார், அவ்வளவு தான்,'' என்றார்.
ஓய்வு முடிவு குறித்து ஒரு "டிவி' சானலுக்கு அளித்த பதிலில் சச்சின்,"" பி.சி.சி.ஐ., முடிவு குறித்து இப்போது எதுவும் தெரிவிக்க இயலாது. என்னைப் பொறுத்தவரை ஒவ்வொரு போட்டிக்கு ஒருமுறையும் இதுகுறித்து ஆய்வு செய்து வருகிறேன்,'' என்றார்.